மனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் கைது!
ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஏழுமலை, வனிதா தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த ஏழுமலை வீட்டில் இருந்த பூரிக்கட்டையை எடுத்து வனிதாவின் தலையில் அடித்ததாக தெரிகிறது.
அதில் பலத்த காயம் அடைந்த மனைவிக்கு அருகில் உள்ள மருந்துக்கடையில் மாத்திரைகளை ஏழுமலை வாங்கிக் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனாலும் வனிதாவிற்கு தொடர்ந்து தலைவலியும், அடிக்கடி மயக்கமும் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி அவர் திடீரென்று உயிரிழந்தார். இதனையடுத்து ஏழுமலை வனிதாவின் உடலை சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோவிலூர் என்ற கிராமத்திற்கு எடுத்து சென்றார்.
உடல் நலம் சரியில்லாமல் மனைவி வனிதா இறந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்தார். ஆனால் வனிதாவின் தந்தை குப்புசாமி மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து திருவண்ணாமலை காவல்துறையினர் வனிதாவின் உடலை திருவொற்றியூருக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை நடத்தியதில் கடுமையாக அடிபட்டதால்தான் வனிதா உயிரிழந்தார் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் ஏழுமலையை கைது செய்தனர்.