மருத்துவ காரணங்களுக்காக உடனே இ-பாஸ் வழங்க வேண்டும்! உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், வெளி மாவட்டங்களில் சிக்கி உள்ள உறவினர்கள் வீட்டு திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள், மரணம் போன்ற நிகழ்வுகளிலும் பலரும் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது.
இதற்காக தமிழக அரசு, ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு இ-பாஸ் வழங்குவதாக அறிவித்து உள்ளது. இந்த அனுமதிச் சீட்டுகள் மின்னணு முறையில் வழங்கப்படுகிறது. ஆனால், இதற்கு காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர், மருத்துவ உதவிக்காகவும், உறவினர்களின் இறப்பு போன்ற காரணங்களுக்காகவும் வெளியூர் பயணிக்க விண்ணப்பிப்பவர்களுக்கு தாமதமாக அனுமதிச் சீட்டு வழங்குவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 24 மணிநேரமும் பாஸ் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒருவர் பாஸ் பெற 2 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றால் எமர்ஜென்சி என்பதற்கு என்ன அர்த்தம் என்று கூறி, வரும் திங்கட்கிழமை உரிய பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.