அதிமுக அவைத் தலைவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் திமுக!
பேரறிஞர் அண்ணா தொடங்கிய திமுகவில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த நெடுஞ்செழியன் நாவலர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். நடமாடும் பல்கலைக் கழகம் என்று வர்ணிக்கப்பட்டார்.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சராகும் வாய்ப்பு நாவலருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நேரத்தில், பெரியார், எம்ஜிஆர் ஆதரவுடன் கருணாநிதி முதலமைச்சர் ஆனார். அவர் அமைச்சரவையில் பணியாற்றிய நாவலர் பின்னர் தனிக்கட்சி கண்டு, இறுதியில் எம்ஜிஆரின் அதிமுகவில் இணைந்து நிதியமைச்சராகத் தொடர்ந்தார். ஜெயலலிதா அமைச்சரவையிலும் அதே துறை அமைச்சராக நீடித்தார். அதிமுக அவைத் தலைவராகவும் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் இரண்டு தடவை தற்காலிக முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.
நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று சட்டமன்றத்தில் திமுக சார்பில் துரைமுருகன் வலியுறுத்தினார். அரசுத் தரப்பில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்றாலும், திமுக சார்பாக கொண்டாடப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
”நாவலரை என்றும் மறவாத தி.மு.கழகத்தின் சார்பில் அவரது ‘நூற்றாண்டு நிறைவு விழா’ 11-7-2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம், அறிவாலயத்தில் நாவலர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, மரியாதை செலுத்திப் போற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெறும்,” என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எம்ஜிஆர், கருணாநிதி, நெடுஞ்செழியனுக்கு இடையே அரசியல் எதிர்ப்புகளையும் கடந்த நல்ல நட்பு நீடித்தது என்பது குறிப்பிடத் தக்கது.