தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்!!

 

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம் ஆகும்.

இந்தக் கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக முன்னாள் அமைச்சர் வளர்மதி இருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லியோனி, சிறந்த ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவர். இவருக்கு, 2010ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.