கொரோனாவினால் இறந்த டாக்டர் உடலை புதைக்க எதிர்ப்பு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
மருத்துவமனையிலிருந்து கீழ்ப்பாக்கத்தில் உல்ல கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட டாக்டரின் உடலை அங்கே கூடியிருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் இரவு 12 மணிக்கு அண்ணாநகர் வேளாங்காடு கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது, அங்கேயும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ட்ரைவர் ஆனந்த் மற்றும் தாமோதரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் வாகனம் ஆஸ்பத்திரிக்கே திரும்பி விட்டது. காயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் உதவியுடன் மாற்று ட்ரைவர்கள் ஓட்டிச்சென்று மீண்டும் வேளாங்காடு கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
20 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இறந்த டாக்டருடன் பணிபுரிந்த இளம் மருத்துவர் கண்ணீர் மல்க வீடியோவில் கூறியிருந்தது சமூகத் தளங்களில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பொக்லைன் எந்திரம் இல்லாமல், கைகளால் மண்ணை நிரப்பி மூடினோம் என்று அவர் கூறியிருந்தது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தமிழக அரசும், காவல்துறையும் ஏப்ரல் 28ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி கூறப்பட்டுள்ளது.