குஜராத் வெள்ளத்தை சென்னை வெள்ளம் எனக் குறிப்பிட்ட பாஜக மாநிலப் பொருளாளர்: ட்விட்டரில் குவியும் விமர்சனங்கள்

 

பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ட்விட்டர் பக்கத்தில் குஜராத் வெள்ள பாதிப்பு புகைப்படத்தை சென்னை வெள்ளம் எனக் குறிப்பிட்டதற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளது.

பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில்  வெள்ளம் ஓடுவதால் வாகனங்கள்  நீரில் ஊர்ந்து செல்கின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக ஆட்சியை விமர்சித்துள்ளார். அதில், “விடியல் ஆட்சியில் ஒரே நாள் மழையில் நீச்சல்குளம் ஆன சென்னை” என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த பதிவிற்கு சமூக வலைதளவாசிகளிடம் இருந்து கடும் விமர்சனம் குவிந்து வருகிறது. குஜராத் வெள்ள பாதிப்பு புகைப்படத்தை சென்னை வெள்ளம் எனக் குறிப்பிட்டதற்கே காரணம் என்று தெரிவந்துள்ளது.