சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட்டியிட வேண்டும்.. ரஜினிக்கு கோரிக்கை!
மதுரை மாநகர துணைச் செயலாளர்கள் பால்பாண்டி, அழகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாநகரத்தில் உள்ள 100 வார்டுகளிலிருந்தும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 1100 பேர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மதுரை மாவட்டத்தில் ரஜினி போட்டியிட வேண்டும், மதுரை மாநகரின் 100 வார்டுகளிலும் நலத்திட்டங்களுடன் ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம், சுற்றுப்புற சூழல் காக்க ப்ளாஸ்டிக் பை தவிர்த்து துணிப்பை பயன்படுத்துதல், டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்துதல், பொது இடங்களில் பேனர் வைப்பதை தவிர்த்தல் போன்ற 10 தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன.
மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது தடவையாக முதலமைச்சராக பதவியேற்றார் எம்.ஜி.ஆர். அப்போதைய மதுரை மாவட்டத்தில் இருந்த ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாக முதலமைச்சர் ஆனார். எம்ஜிஆர் போல் சாமானிய மக்களுக்கான ஆட்சியை அமைப்பேன் என்று கூறியுள்ள ரஜினி, மதுரை மாவட்டத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ரசிகர்கள் தீர்மானம் இயற்றியுள்ளனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மதுரை மாவட்டத்தில் ரஜினி போட்டியிட வேண்டும் என்ற தீர்மானம் இயற்றப்பட்டுள்ள விவகாரம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.