நண்பரை துப்பாக்கியால் சுட்ட மாணவர்! பப்ஜியால் நேர்ந்த விபரீதம்?
வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் முகேஷ், துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். அப்போது அவருடன் இருந்த நண்பர் விஜய் தலைமறைவானார். முகேஷ் மீது பாய்ந்த குண்டு நிகழ்விடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. தடயவியல் சோதனைக்குப் பிறகே அது என்ன வகையைச் சேர்ந்தது எனத் தெரிய வரும்.
இதற்கிடையே தப்பியோடிய விஜயை 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். முகேஷ் உயிரிழக்கக் காரணமான துப்பாக்கி, விஜயின் உறவினருடையது எனக் கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் விஜயின் உறவினர் துப்பாக்கி வாங்கி வைத்திருந்ததாகத் தெரிகிறது. அவருக்கு தெரியாமல் துப்பாக்கியை விஜய் எடுத்துச் சென்றிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
துப்பாக்கியை முகேஷிடம் காண்பிக்கும்போது தவறுதலாக அது வெடித்ததா? அல்லது முகேஷை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் அவரது நெற்றியில் விஜய் சுட்டாரா எனத் தெரியவில்லை. விஜய் மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. எனவே, வழிப்பறியில் ஈடுபடுவதற்காக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் கள்ளத் துப்பாக்கியை அவர் வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு உள்ளது. இந்த நிலையில் துப்பாக்கியை கடலில் வீசிவிட்டதாக விஜய் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறியுள்ளார். உயிரிழந்த முகேஷ் மற்றும் விஜய் ஆகியோரின் நண்பர்கள், உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.