ஏரல் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.. யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

 

ஏரல் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மீனாட்சி அம்மன் சமேத சொக்கலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலையில் மங்கள இசை, மகா கணபதி அனுக்ஞை, எஜமானர் சங்கல்பம், விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாஹவாஜனம், சவுபாக்கிய மகா கணபதி ஹோமம், கஜ பூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

மதியம் நவகிரக ஹோமம், தனபூஜை, துர்கா ஹோமம், தீபாரதனை நடந்தது. மாலையில் தாமிரபரணி ஆற்றியில் இருந்து தீர்த்தம் கொண்டு எடுத்து வரப்பட்டு, முதல் கால யாக பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (செப். 2) காலை 7 மணிக்கு மங்கள இசை, காலை 8.30 இரண்டாம் காலை யாக பூஜை, விக்னேஸ்வரர் பூஜை, தீபாரதனை, காலை 11 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, விசேஷசந்தி, மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை, இரவு 8.30 மணிக்கு வேதிசார்ச்சனை, வேதபாராயணம், சிவ சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சி நாளை (செப். 3) நடக்கிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு மங்கள இசை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, விக்னேஸ்வரர் பூஜை, தீபாரதனை, காலை 5.30 மணிக்கு மேல் யாத்திராதானம், கடம் புறப்படுதல், காலை 6 மணிக்கு சுவாமி, அம்மன், விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகமும், காலை 6.30 மணிக்கு மீனாட்சி அம்மன், சொக்கலிங்க சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாரதனை நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், பகல் 11 மணிக்கு மகேஸ்வரர் பூஜை, அன்னதானம், மாலை 6 மணிக்கு சுவாமி, அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா வருதல். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சொக்கலிங்க சுவாமி திருக்கோவில் பரம்பரை அறங்காவலர்கள், கைங்கர்ய சபா மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.