பீமநாயக்கன்தோப்பு முத்துமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவம்.. தேர் திருவிழா.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

 

விழுப்புரம் பீமநாயக்கன்தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பீமநாயக்கன்தோப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு 98-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் இரவில் அன்ன வாகனம், பூத வாகனம், நாக வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மதியம் 2 மணியளவில் தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இத்தேர், பீமநாயக்கன்தோப்பு பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

அதன் பிறகு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு தொட்டில் செடல் உற்சவம் நடந்தது.