பாபா ராம்தேவ் பதஞ்சலி குருகுலத்தில் இளம் பெண் தற்கொலை... போலீசில் சிக்கிய 7 பக்க கடிதம்

 

பதஞ்சலி குருகுலத்தில் 5வது மாடியில் இருந்து குதித்து எம்.ஏ. மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஹரித்துவாரில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்திற்குட்பட்ட பகதராபாத் பகுதியில் யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சாரயா பாலகிருஷ்ணா ஆகியோரால் நடத்தப்படும் பதஞ்சலி குருகுலம் செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேவக்யா (வயது 24) என்ற இளம் பெண் ஆறு ஆண்டுகளாக இங்கு தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இவர் கட்டிடத்தின் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் குருகுலத்தில் அவர் தங்கியிருந்த அரையில் சோதனை செய்தனர். அப்போது அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய ஏழு பக்கம் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

இதில் ஒரு நபரைப் பற்றியே அதிகம் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரின் பெயரைக் கடிதத்தில் அவர் குறிப்பிடவில்லை. மேலும் தற்கொலைக்கு காரணம் குறித்து அவர் குறிப்பிடவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.