சானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா? சுகாதாரத்துறை விளக்கம்!
இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 6000 பேர்.
கொரோனாத் தொற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பொது இடங்களிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த கிருமிநாசினிகள் மூலம் உருவாகும் மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலமும், அந்த இடங்களில் நடந்து செல்வதன் மூலமும் புற்றுநோய்கள் உருவாகலாம் என்ற செய்தியும் , தொடர்ந்து சானிடைசர் கொண்டு கைகழுவதாலும் புற்றுநோய் உருவாகும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும் எனவும் சமூக வலை தளங்களில் செய்திகள் உலா வந்தன.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தொடர்ந்து சானிடைசர்கள், கிருமி நாசினிகள் பயன்படுத்துவதால் உடலுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனவும், மேலும் 70% ஆல்கஹால் கலந்த கிருமி நாசினிகள் கொரோனா தொற்றை தடுக்கவே உதவி செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.