நாட்டு மக்களின் நலனைத் தவிர வேறு சிந்தனையே இல்லை.. பிரதமருக்கு புகழாரம் சூட்டிய அமித்ஷா!!

 

பிரதமர் இந்த அறிவிப்பை ‘குரு புராப்’ தினத்தில் வழங்கியிருப்பதை கூடுதல் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது என அமித்ஷா பாராட்டியுள்ளார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக  பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.  பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்றும், தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாக விமர்சித்தும் எதிர்க்கட்சிகள் கருத்து கூறி வருகின்றன.

இந்நிலையில்,  பாஜகவின் மூத்த தலைவரும் ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

“பிரதமர் இந்த அறிவிப்பை ‘குரு புராப்’ தினத்தில் வழங்கியிருப்பதை கூடுதல் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது. பிரதமரின் இந்த அறிவிப்பு, ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த அறிவிப்பு மூலம் தனது மிகச்சிறந்த அரசியற்திறனை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர்” எனக்குறிப்பிட்டுள்ளார்.