9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!!

 

புதுவையில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா இந்தியாவிலும் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாத இறுதியில் பரவ தொடங்கியது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுவையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அனைத்தும் மூடப்பட்டன.

இதற்கிடையில் புதுவையில் கொரோனா 2-வது அலையில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து கொரோனா பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அரசின் அதிரடி நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது.

இதையடுத்து மே மாதம் 24-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது உயிரிழப்பு, பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. எனவே ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதுவையில் 9 முதல் 12-ம் வகுப்பு வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதைபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளும் வரும் 16-ம் தேதி முதல் திறக்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.