பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு சம்பளக்குறைப்பு!
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பங்கேற்ற அமைச்சரவை கூட்டத்தில், மற்ற அமைச்சர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு 30 சதவீதம் சம்பளக்குறைப்பு என்ற முடிவெடுக்கப்பட்டது. ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த சம்பளக்குறைப்பு ஓராண்டுக்கு அமலில் இருக்கும்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பாராளுமன்றச் சட்டத்தின் உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பான பிரிவுகளை திருத்தம் செய்யும் அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் கவர்னர்களும் தாமாக முன் வந்து சம்பளக் குறைப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த சம்பளக்குறைப்புக்கு மாநில அரசுகள் முன்வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.