அரபிக் கடலில் சஹீன் புயல்: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

 

சஹீன் புயல் காரணமாக அக்டோபர் 4-ம் தேதி வரை 7 மாநிலங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள சஹீன் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அக்டோபர் 4-ம் தேதி வரை பீகார்,  மேற்கு வங்காளம்,  சிக்கிம்,  தமிழ்நாடு,  கேரளா,  கர்நாடகா,  குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு  கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் உள்பகுதிகள் உட்பட தமிழ்நாடு, கேரளாவில் அக்டோபர் 1ம் தேதி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். இதனால் அக்டோபர் 1 முதல் 4-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை அக்டோபர் 4-ம் தேதி காலை வரை குஜராத் கடல் பகுதி மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள்,  ஓமன் வளைகுடா மற்றும் வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வடகிழக்கு அரபிகடல் பகுதியில் நிலை கொண்டுள்ள சஹீன் புயல்,  அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக உருவாக கூடும்.

பின்னர் இந்திய கடல் பகுதியை விட்டு விலகி நகர தொடங்கிவிடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.