சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 16ஆம் தேதி திறப்பு
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன்கோவில் ஆண்டு தோறும் மகர விளக்கு வழிபாடு 2 மாதங்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு, வரும் 16ஆம் தேதி கோவில் திறக்கப்படுகிறது. இதையடுத்து மகர விளக்கு வழிபாடு 17ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி 5 கட்டங்களாக சபரிமலை ஐயப்பன் கோவிலிலும், அதன் சுற்றுபுறங்களிலும் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
முதல் கட்டமாக வரும் 15ஆம்தேதி முதல் 30ஆம்தேதி வரை 2,551 பேர் சன்னிதானத்திலும், பம்பை, நிலக்கல், எருமேலி, பத்தணம்திட்டாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. அந்த அமர்வுக்கு தலைமை வகிக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்குள் இந்த வழக்கிலும் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.