வரும் 25-ம் தேதி ஐ.நா. பொதுசபையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

 

நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் வரும் 25-ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

ஐ.நா. பொதுசபையின் 76-வது அமர்வு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 21 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த அமர்வில் உயர்மட்ட பிரிவின் பொது விவாதத்தில் பல்வேறு நாடுகளில் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி ஐ.நா. பொதுசபையில் உரையாற்றுகிறார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முன்னதாக வரும் 24-ம் தேதி அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.