உலக நாடுகளுக்கு மனைவியுடன் சுற்றுலா சென்ற கேரள ‘டீக்கடைக்காரர்’ மரணம்

 

மனைவியுடன் 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்ற கேரள ‘டீக்கடைக்காரர்’ மாரடைப்பால் காலமானார்.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் கேஆர் விஜயன் (வயது 71). அவரது மனைவி மோகனா. கணவன் மனைவி இருவரும் இணைந்து கொச்சியில் ‘ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்’ என்ற பெயரில் சிறிய ‘டீக்கடை’ ஒன்றை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று மோகனா தனது கணவர் விஜயனிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தங்கள் டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தின் சிறு பகுதியை (தினமும் 300 ரூபாய்) தினம் தினம் தம்பதியர் சேமித்து வைத்துள்ளனர்.

இதன் பலனாக 2007-ம் ஆண்டு விஜயன் தனது மனைவியுடன் முதல் வெளிநாட்டு பயணம் செய்தார். அவர் முதல் முறையாக இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுலா சென்றார். அதன் பின்னர் தங்கள் சேமிப்பு மற்றும் சிறு கடன்களின் உதவிகளுடன் கடந்த 14 ஆண்டுகளில் விஜயன் - மோகனா தம்பதி 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

2019-ம் ஆண்டு இந்த தம்பதியரின் பயணத்திற்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா உதவி செய்துள்ளார். அதன் பின்னரே விஜயன் - மோகனா தம்பதியின் சுற்றுப்பயணங்கள் குறித்து தேசிய அளவில் பலருக்கு தெரியவந்தது.

இந்நிலையில், டீக்கடை நடத்தி உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று பிரபலமான விஜயன் கொச்சியில் நேற்று மாரடைப்பால் காலமானார். மரணமடைந்த விஜயன் தனது மனைவி மோகனாவுடன் கடைசியாக கடந்த மாதம் 21 -ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ரஷியாவுக்கு சுற்றுலா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.