டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 400 சதவிகிதம் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், கலந்துகொண்ட பட்டமளிப்பு விழா நடைபெற்றதால் மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே போராட்டத்தில் தீவிரம் காட்டினர். இதனால் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு வளாகத்தில் இருந்து பல்கலைக்கழக வரை என சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை வாயில்கள் மூடப்பட்டன. எனினும், பட்டமளிப்பு விழா நடந்த அரங்கை நோக்கி மாணவர்கள் பேரணி செல்ல முயன்றனர்.
ஒரு கட்டத்தில் மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட பாதுகாப்பு தடுப்பு வேலிகளை தாண்டிச் செல்ல முயற்சித்தனர். இதனால் காவல்துறையினருக்கு மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் ஜக்தீஷ் குமாரை கண்டித்தும், go back delhi police என்று முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தை கட்டுப்படுத்த 200க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். மாணவர்களின் போராட்டத்தால் நெல்சன் மண்டேலா சாலை, வசந்த் விஹார், உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டன. இதனிடையே குறைவான கட்டணத்தில் மாணவர்களுக்கு கல்வியை வழங்காமல் பட்டமளிப்பு விழாக்களை நடத்துவதில் பயன் எதுவும் கிடையாது என
மாணவர் சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 40 சதவிகிதம் ஏழை மாணவர்களே படிக்கும் நிலையில் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக நிர்வாகம் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என மாணவர் சங்கத்தினர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.