சத்தீஸ்கரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியில் கலாட்டா...?

 

பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

பஞ்சாப் மாநில காங்கிரசில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கரிலும் உள்கட்சி மோதல் வலுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வராக இருக்கும் பூபேஷ் பாகல் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், எஞ்சிய பதவிக்காலத்தை தமக்கு தர வேண்டும் என அமைச்சரும் அதிருப்தி தலைவருமான சிங் தியோ போர்க்கொடி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே 15-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அவர்கள் காங்கிரஸ் மேலிடத்தை சந்தித்து முதல்வருக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

90 இடங்களை கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 70 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 60 பேரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக முதல்வர் வட்டாரம் தெரிவித்துள்ளது.