பொய்யான தகவல்களை முறியடிப்போம் – முதலமைச்சர்கள் இபிஎஸ், பினராயி விஜயன் உறுதி
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழ்நாடு – கேரள எல்லையை கேரளா அரசு மூடிவிட்டது என்று ஒரு தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் சகோதர சசோதரிகள் என்றும் பினராயி விஜயன் கூறியிருந்தார்.
அந்த வீடியோவை ட்வீட் செய்த எடப்பாடி பழனிசாமி, “கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்!,” என்று கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்து தமிழில் ட்வீட் செய்துள்ள பினராயி விஜயன், “கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான பரஸ்பர உறவானது கலாச்சாரம், சகோதரத்துவம் மற்றும் மொழி முதலியவற்றால் பின்னிப் பிணைந்தது ஆகும். இந்த ஆழமான பந்தத்தை புரிந்து கொள்ள இயலாதவர்கள் தான் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். நாம் ஒருங்கிணைந்து இந்த சவால்களை முறியடிப்போம்,” என்று கூறியுள்ளார்.