அதிகாலையில் காதலியின் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவன்.. குத்திக்கொலை செய்த பெண்ணின் தந்தை.!!

 

அதிகாலையில் காதலியின் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவனை அப்பெண்ணின் தந்தை குத்திக்கொலை செய்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அனீஷ் ஜார்ஜ் (வயது 19). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், பேட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தளத்தில் பாடகர் குழுவில் பணியாற்றி வந்துள்ளார். அந்த பாடகர் குழுவின் அதே பகுதியை சேர்ந்த லாலன் என்பவரின் மகள் சேர்ந்துள்ளார். ஜார்ஜின் வீடும், லாலனின் வீடும் ஒரே தெருவில் உள்ளது.

இதற்கிடையில், 11-ம் வகுப்பு படித்து வரும் லாலனின் மகளுக்கும் அனீஷ் ஜார்ஜ்க்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் அனீஷ் ஜார்ஜ் தன்னுடைய காதலியை சந்திக்க அவரது வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு, தனது காதலியை அனீஷ் தனியாக சந்திக்க சென்று உள்ளார்.

வீட்டின் 2வது மாடியில் உள்ள தனது காதலியின் அறைக்குள் அனீஷ் ஜார்ஜ் சென்றுள்ளார். அப்போது, தனது வீட்டில் ஏதே சத்தம் கேட்டதையடுத்து லாலன் தூக்கத்தில் இருந்து விழித்துள்ளார். அவர் வீட்டின் 2வது மாடியில் தனது மகள் அறையில் இருந்து சத்தம் வருவதை கேட்டுள்ளார்.

இதையடுத்து, திருடன் தான் தனது மகளின் அறைக்குள் நுழைந்துவிட்டான் என கருத்திய லாலன் கத்தியை எடுத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்துள்ளார். அங்கு இருட்டில் ஒரு நபர் நின்றுகொண்டதை பார்த்த லாலன், அனீஷ் ஜார்ஜை திருடன் என கருதி அவரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், அனீஷ் ஜார்ஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். தொடர்ந்து லாலன் தாக்குதல் நடத்திய கத்தியுடன் பேட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்து நடந்த விவரத்தை போலீசாரிடம் கூறினார்.

இதை தொடர்ந்து, சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், உயிருக்கு போராடி கொண்டு இருந்த அனீஷ் ஜார்ஜை ஆம்புலன்சில் ஏற்றி திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அனீஷ் ஜார்ஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லாலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகளை அனீஷ் ஜார்ஜ் காதலிப்பதை தெரிந்துகொண்டு அவரை கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலியின் வீட்டிற்குள் அதிகாலை நுழைந்த கல்லூரி மாணவன் பெண்ணின் தந்தையால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.