புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 

வார்டு ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், தற்போதைக்கு தேர்தலை நடத்தப்போவதில்லை என்றும் புதுச்சேரி அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில், நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி, வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அக்டோபர் 21 முதல் நடக்க உள்ள தேர்தலை தள்ளிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வார்டு ஒதுக்கீடு குளறுபடிக்கு தீர்வு காண அறிவுறுத்திய நீதிமன்றம், அதுவரை வேட்பு மனுக்கள் பெறுவதை தள்ளிவைக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது.