அம்பேத்கர் சிலை உடைப்பு; உத்திரபிரதேசத்தில் பதற்றம்

 

உத்திரபிரதேசத்தில் டாக்டர். அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியில் அம்பேத்கர் சிலையை அடையாளம் தெரியாத சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.  இதனால், உள்ளூர் அரசியல்வாதிகளுடன் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ராணிப்பூர் சாலையை வழி மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து  அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிலர் செங்கற்களால் தாக்கியதில் சிலையின் கை மற்றும் முகம் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, போலீஸ் சூப்பிரண்டு சுஷில் குலே கூறும்போது, “சிலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.  சிலையைச் சேதப்படுத்திய அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.