இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பரிதாப பலி.. ஆவடி அருகே சோகம்!

 

ஆவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியின் டயருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (37). வெல்டராக பணியாற்றி வந்த இவர், நேற்றிரவு தண்டரை மேம்பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருத்தணியில் இருந்து திருமுல்லைவாயிலுக்கு சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற கனரக லாரியை கணேஷ் முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதில் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்த கணேஷ் மீது லாரி மோதியதில் அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், கணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து லாரி ஓட்டுரான திருத்தணி, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி (31) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரனமாக அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.