நீச்சல் குளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு... நண்பனின் திருமண விருந்தில் நேர்ந்த சோகம்!

 

சென்னையில் நண்பனின் திருமண மது விருந்து கொண்டாடியபோது நீச்சல் குளத்தில் குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் பூவனூர் பகுதியை சேர்ந்தவர் வருண்குமார் (25). இவருடன் கல்லூரியில் படித்த நண்பர் ஒருவருக்கு நேற்று சென்னை மயிலாப்பூரில் திருமணம் நடைபெற்றது. திருமணமான நண்பர் தன்னுடன் படித்த சக நண்பர்களுக்கு மது விருந்து அளிக்கும் வகையில் சென்னையை அடுத்த தாழம்பூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மது விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது.

அந்த மது விருந்தில் வருண்குமார் உள்ளிட்ட 12 நபர்கள் இரவு தங்கி மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இளைஞர்கள் சிலர் நீச்சல் குளத்தில் குளித்துள்ளனர். சிலர் மது அருந்து கொண்டிருந்துள்ளனர் அப்போது வருண்குமார் நண்பர்களுடன் இல்லாததை கண்ட சக நண்பர்கள் வேறு எங்கேயாவது சென்று இருப்பார் என்று எண்ணிக் கொண்டு அவரை தேடுவது நிறுத்திக் கொண்டுள்ளனர்.

பின்னர் இரவில் மது அருந்திவிட்டு அவர் அவர் அறையில் உறங்கியுள்ளனர். பின்னர் காலை தூங்கி எழுந்தவுடன் நீச்சல் குளத்தில் வருண்குமார் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே இச்சம்பவம் குறித்து தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விடுதியில் உடன் தங்கி மது அருந்தியவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அனைவரும் ஒன்றாக மது அருந்திகொண்டிருந்ததாகவும் சிலர் நீச்சல் குளத்தில் குளித்து விளையாடியதாகவும் அப்போது வருண்குமார் நண்பர்களுடன் இல்லாததை உணர்ந்த சக நண்பர்கள் அருகில் எங்கேயாவது இருப்பார் என்று எண்ணிக் கொண்டு அவரவர் உறங்கி விட்டதாகவும் காலையில் எழுந்து பார்த்த பிறகுதான் இறந்துள்ளது தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.