இளம் பெண் வெட்டிக்கொலை.. முகமூடி அணிந்து வந்த நபர்களால் பயங்கரம்!

 

அம்பத்தூரில் உறவினர் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த இளம்பெண்ணை முகமூடி அணிந்து வந்த 4 பேர் சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி நந்தினி (27). சதீஷ், பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கிறார். இதனிடையே நந்தினியின் உறவினரான மதன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று மாலை நந்தினி, அம்பத்தூர் தொழிற்பேட்டையை அடுத்த ஐ.சி.எப். காலனிக்கு சென்று இருக்கிறார்.

அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல் நந்தினியை திடீரென சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியுள்ளார்கள். இதில் அலறி துடித்தபடி படுகாயம் அடைந்த நந்தினி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவர் இறந்த பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், கொலையான நந்தினி உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நந்தினியின் கணவர் சதீஷ், பாலாஜி என்பவரை வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பாலாஜி கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் அவரது கூட்டாளிகள் சதீஷின் மனைவியான நந்தினியை வெட்டிக் கொன்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று தெரியவில்லை.

இதுதொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முகமூடி கும்பலை தேடி வருகிறார்கள். உறவினர் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த இளம்பெண் அம்பத்தூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.