ஓடும் ரயில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் பயணிகள்.. காட்பாடியில் திக் திக் நிமிடங்கள்!

 

கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் குடும்பத்துடன் திரும்பிக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு காட்பாடியில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்து உள்ள பொருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (25). நிறைமாத கர்ப்பிணியான இவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 13 பேருடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று டெல்லியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் மீண்டும் சொந்த ஊருக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

இந்த ரயில் நேற்று மதியம் 12 மணியளவில் சித்தூர் ரயில் நிலையம் தாண்டி வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் பயணிகள் சிலர் கல்பனாவுக்கு ஓடும் ரயிலிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அதில் கல்பனாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்ததுள்ளது. 

இந்த தகவல் உடனடியாக ரயிலின் டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மூலம் காட்பாடி ரயில் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ரயில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. அங்கு மருத்துவக் குழுவினருடன் தயார் நிலையில் இருந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில் நிலைய பணியாளர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

இரயில் காட்பாடி வந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்பனா மற்றும் அவரது குழந்தையை பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஓடும் இரயிலில் பெண்ணுக்கு பிரசவமான சம்பவம் காட்பாடி இரயில் நிலையத்தில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.