முதுமலையில் புலி தாக்கி உயிரிழந்த பெண்.. அச்சத்தில் உறைந்த மக்கள்!!

 

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் புலி தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு வனப்பகுதியை ஒட்டிய யானைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி (50). இவர், நேற்று மாலை முதல் வீடு திரும்பததால் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அப்பகுதி முழுவதும் தேடி உள்ளனர். இரவு வரை மாரி வீடு திரும்பாத நிலையில் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் மாரியை தேடிப் பார்த்த போது, புதரில் உடல் சிதைந்த நிலையில் ஒரு உடல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிராம மக்கள் சென்று பார்த்த போது, அது மாரி என்பதும், புலி தாக்கி உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறையினர் மாரியின் உடலை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தெப்பக்காடு பகுதியில் வேட்டை தடுப்பு காவலர் மாதன் என்பவரை புலி தாக்கியதில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். 

இந்த நிலையில் தற்போது புலி தாக்கி பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பழங்குடியின கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இரண்டு பேரை தாக்கிய புலியை உடனே கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.