தூக்க கலக்கத்தில் எலி பசையில் பல் துலக்கிய பெண் பலி.. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

 

திருச்சியில் தூக்க கலக்கத்தில் பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே உள்ள கே.சாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி (35). கொத்தனாரான இவருக்கு ரேவதி (27) என்ற மனைவி இருந்தார். இவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று காலை ரேவதி தூக்க கலக்கத்தில் பற்பசை என நினைத்து எலிக்கு வைக்கப்படும் பசையை வைத்து பல் துலக்கியுள்ளார். பின்னர் வேலைக்கு சென்ற ரேவதி, மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வாந்தி எடுத்துள்ளார்.    

இதைக் கண்ட அதிர்ந்நு போன குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.