மர்ம காய்ச்சலால் காதல் மனைவி உயிரிழப்பு.. துக்கத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை!

 

நாட்டறம்பள்ளி அருகே கர்ப்பிணி மனைவி மர்ம காய்ச்சலால் உயிரிழந்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே செல்வநகர் பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் யோகேஸ்வரன் (26). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் கந்திலி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (19) என்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பச்சூரில் உள்ள யோகேஸ்வரன் வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த விஜயலட்சுமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இதனால் 3 மாதங்களாக காதல் மனைவி இறந்த சோகத்தில் இருந்த யோகேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார், இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.