விளக்கு ஏற்றிய போது ஆடையில் தீ.. அதிமுக முன்னாள் அமைச்சர் மருமகள் உயிரிழப்பு!!

 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கெரகோடஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கே.பி. அன்பழகன். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் உயர்க் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். இவர் தர்மபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

இவரது மகன் சசிமோகன் (32). இவர் மருத்துவக் கல்லூரியில் படித்த போது தன்னுடன் படித்த பூர்ணிமா (30) என்பவரை காதலித்தார். இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி வீட்டில் பூர்ணிமா விளக்கு ஏற்றினார். அப்போது அவருடைய ஆடையில் தீப்பிடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் 80 சதவீதம் தீக்காயமடைந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கவலைக்கிடமான நிலையில் இருந்த பூர்ணிமாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட முன்னாள் அமைச்சரின் மருமகள் திடீரென மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.