மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வராததற்கு காரணம் என்ன? உங்க மொபைலிலேயே தெரிஞ்சுக்கோங்க!

 

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தொகை வரவு வைக்கப்படாதவர்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய பிரத்யேக இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது. 

சில மகளிரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்படாததால் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது. இதனை சரி செய்து அவர்களின் வங்கி கணக்குகளுக்கும் விரைவில் உரிமைத்தொகை வரவு வைக்க அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று அஞ்சலக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மனியார்டர் மூலமாக தொகை அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.

வரவு வைக்கப்பட்ட தொகை சம்பந்தப்பட்ட பயனாளிகள் எடுக்கும் வரை அவர்களின் வங்கி கணக்கிலேயே தொடர்ந்து இருக்கும். பயனாளிகள் தங்களின் தேவை அல்லது விரும்பும் வரை தொகையினை வங்கி கணக்கில் வைத்திருக்கலாம்.

மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமைத் தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகிய காரணங்களுக்காக திட்ட ஒப்பந்தத்திற்கு முரணாக சில வங்கிகளால் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் முதல்வரின் முகவரி உதவி மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1100-ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி தொடர்புடைய விண்ணப்பதாரர்களின் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு இன்று (செப். 19) முதல் அனுப்பி வைக்கப்படும்.

மேலும், விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய அரசால் https://kmut.tn.gov.in என்ற இணையதளம் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. தங்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன் 1100 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.