என்னது பொன்விழாவா? விஜய் க்கு இது கூடத் தெரியல்லியா?

 

நேற்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமல் திரும்பிச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி யை கடுமையாக சாடியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சீமான், விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

தவெக தலைவர் நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் ஆளுநரின் செயலை விமர்சித்து  தனது அறிக்கையை பதிவிட்டுள்ளார். அதில்,

”தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல,

இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும். ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று விஜய் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையில் ”பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு” என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளார். அவர் சொன்னது போல் என்றால் தமிழ்நாடு சட்டமன்றம் 1974ம் ஆண்டு முதல் தான், அதாவது 50 ஆண்டுகள் தான் செயல்பட்டுவருவது என்றாகும். ஆனால் தமிழ்நாடு சட்டமன்றம், சென்னை மாகாணமாக இருந்த காலம் தொட்டே100 ஆண்டுகளைக் கடந்த சிறப்பு பெற்றதாகும். சபாநாயகர் இருக்கையின் வயசு தான் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வயதும் ஆகும். 

விஜய் க்கு யாரோ தப்புத் தப்பா அறிக்கை எழுதித் தர்றாங்க் என்பது இந்த ஒரு அறிக்கை மூலமாகவே தெரிகிறது.