விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. முக்கிய கட்சிகள் உள்பட 29 வேட்புமனுக்கள் ஏற்பு

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முக்கிய கட்சியின் வேட்புமனுக்கள் உட்பட 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதைத் தொடா்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டும். இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த  10-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் அடுத்த மாதம்  10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட மொத்தம் 64 மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை திங்கள்கிழமை காலை 11 மணியளவில் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழு பரிசீலனை செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

மொத்தம் 64 மனுக்கள் அளித்தவர்களின் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பரிசீலனை நடைபெற்றது. பின்னர், 12.30 மணியளவில் பரிசீலனையில் திமுக, பாமக நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சி மனுக்கள் உட்பட 29 மனுக்கள் ஏற்றுக் கொள்வதாகவும், 35 மனுக்கள் நிராகரிக்கப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தெரிவித்தார்.

இதில், திமுக, பாமக, நாதக ஆகிய முக்கிய கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள்(ஜூன் 26) கடைசி நாளாகும். அன்றைய தினமே வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்படுகிறது.