விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை.. மியாட் மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!

 

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்திற்கு ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதன் காரணமாக உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. தேமுதிக தரப்பில் நவம்பர் 20-ம் தேதி வெளியிடபட்ட அறிக்கையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை என்றும் அவருக்கு 14 நாட்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.

அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம் என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.