விஜயதரணியின் ராஜினாமா ஏற்பு.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

 

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அளித்த கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் விஜயதரணி. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி என்ற அடையாளத்தோடு தேர்தலில் களம் இறங்கிய இவர் வெற்றி மேல் வெற்றியை குவித்து, அரசியலில் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

இந்த நிலையில் சமீபகாலமாக காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால் அவர் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் விஜயதரணி நேற்று திடீரென டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு சென்று, தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இணைப்பு நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கட்சித்தலைமைக்கு எழுதிய கடிதத்தை விஜயதரணி செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இதனிடையே கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் விஜயதரணியின் எம்எல்ஏ பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

மேலும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதிவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி கடிதம் எழுதி உள்ளார். இதையடுத்து விஜயதரணி ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜயதரணியின் பதவி விலகலை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அளித்த கடிதத்தை ஏற்பதாக அப்பாவு அறிவித்துள்ளார்.

ராஜினாமா ஏற்கப்பட்டதால் விளவங்கோடு தொகுதி காலி என விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தொகுதி காலி என அறிவிக்கப்பட்டால் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.