சுயமாக சிந்திக்காத விஜய்.. தொல் திருமாவளவன் கடும் குற்றச்சாட்டு!!
நடிகர் விஜய், அவரது ரசிகர்கள் சொல்வது போல் மூன்று நாட்கள் உண்ணாமல் கொள்ளாமல் சோகமாக இருந்து. பின்னர் தாடியை ட்ரிம் செய்து வெளியிட்ட வீடியோ பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இதில் விஜய் பேசிய கருத்துக்கள் அவருடைய சுய சிந்தனையில் பேசியது இல்லை என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
”ஒரு சதுர மீட்டரில் 4 அல்லது 5 பேர்தான் நிற்க முடியும். அங்கே 10 முதல் 15 பேர் நின்றிருக்கிறார்கள். 10 மணி நேரம் காத்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது 100 சதவீதம் கண்கண்ட உண்மை. அதனை மறைத்து சதி என்று சொல்வதும், திமுக அரசு மீது பழி போடுவதும் ஆபத்தான அரசியல்.விஜய் க்கே இது நல்லதல்ல.
விஜய் இதனை சுயமாக சிந்தித்து சொன்னதாக தெரியவில்லை. அவரை சுற்றிலும் உள்ளவர்கள் உசுப்பேற்றி இதுபோல பேச சொல்லியுள்ளனர். விஜய் எப்போது சுயமாக சிந்தித்து செயல் திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும்.
பாஜக தரப்பிலிருந்து ஒரு குழு வந்துள்ளது. அதற்கான தேவை என்ன? விஜய் மீது தவறு இல்லை, அரசு மீதுதான் தவறு என உடனடியாக அண்ணாமலை பேசுகிறார். இது அவர்களுக்கே எதிராக முடியும். எங்கள் கட்சி தொண்டர்கள் எல்லாம் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால், வழிவிட்டு நிற்பார்கள். ஆம்புலன்ஸ்கள் நோயாளியை அழைக்க செல்லும்போது ஆள் இல்லாமல்தான் போகும். பின்னர் நோயாளியை ஏற்றி ஆளோடு செல்வார்கள். இதெல்லாம் என்ன பேச்சு. இது நாகரீகமான அரசியலா?” என்று தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.