டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.. 2 திருநங்கைகள் பலி!

 

திருச்சி அருகே டிப்பர் லாரி மீது இருசக்கர வாகணம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 திருநங்கைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் உக்கடை அரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் தனியா, தமிழ். திருநங்கைகளான இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் கரூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த டிப்பர் லாரியை தஞ்சை மாவட்டம் பூதலூர் அயோத்திபட்டியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் திருநங்கைகள் அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகே டிப்பர் லாரியை முந்தி செல்ல முற்பட்டனர். அப்போது நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் டிப்பர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தன்யா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

மேலும் மற்றொரு திருநங்கையான தமிழ் படுகாயம் அடைந்த நிலையில் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பலியான தனியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக டிப்பர் லாரி டிரைவர் மணிமாறன் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியை முந்த முயன்ற பொழுது ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.