மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் பலி.. ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்!!

 

ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அருகே உள்ள எறையூரில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று வந்தது. அந்த நிறுவனத்தில் ஸ்ரீபெரும்புதூர் புள்ளலூர் பகுதியை சேர்ந்த அருண், குளத்தூர் பகுதியை சேர்ந்த ராமு என்ற இரண்டு இளைஞர்கள் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில், தொழிற்சாலைக்குள் வந்த லாரியில் இருந்த உதிரிபாகங்களை இறக்கி வைக்க, லாரியின் பின் கதவை திறந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த மின் வயரில் கதவு உரசியுள்ளது. இதனால், லாரியில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

அப்போது, இருவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒரகடம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருண், ராமு இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தொழிற்சாலையில் பணிபுரியும் சக ஊழியர்கள் அரசு மருத்துவமனை முன் மனமுடைந்து அழுத காட்சி பலரது நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.