புளியமரத்தில் பைக் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. உணவு இடைவேளையில் ஒன்றாக சென்ற நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்

 

மல்லசமுத்திரம் அருகே பைக்கில் சென்ற 3 கல்லூரி மாணவர்கள் நிலைதடுமாறி புளிய மரத்தில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு - சேலம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர் தரணிதரன் (18). இவர் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர் சதீஷ் (20) மற்றும் கோகுல் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கல்லூரி உணவு இடைவேளையின் போது திருச்செங்கோடு சாலையில் மூவரும் சென்றுள்ளனர்.

அப்போது, திரும்பி வரும்போது இடதுபுறம் திரும்பிய வாகனத்தில் மோதாமல் தவிர்ப்பதற்காக, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோகுல் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதில் கோகுல் மற்றும் சதீஷ் ஆகியோர் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையே, படுகாயமடைந்த தரணிதரன் மயக்கமடைந்து கிடந்துள்ளார். விபத்தை கண்ட நபர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து உடனடியாக மூவரையும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மயக்கமடைந்து நினைவு திரும்பாத நிலையில் உள்ள தரணிதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்து போன கோகுல் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எங்கு படிக்கிறார் என்பது குறித்து எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை. உயிரிழந்த இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.