லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இருவர் பலி.. புதுக்கோட்டை அருகே சோகம்!!

 

திருமயம் அருகே அதிவேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவருடன் அதே சமத்துவபுரத்தைச் சேரந்த கார்த்திக் எனபவர் இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை - மதுரை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது பட்டணம் அருகே வந்தபோது திருப்பத்தூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி அதிவேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவர் மீதும் லாரி ஏறி இறங்கியது. 

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமயம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்து ஏற்பட்ட பிறகு தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உயிரிழந்த சின்ராஜ் என்பவர் நாளை சிங்கப்பூருக்கு செல்ல இருந்தார் என்றும் கூறப்படுகிறது. சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.