மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் 2 பேர் பலி.. பொன்னேரி அருகே சோகம்!

 

சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து சகோதரர்கள் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சோழவரம் அடுத்து உள்ள ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவா. இந்த தம்பதியர்களுக்கு விஷ்வா (12), சூர்யா (10) என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். விஷ்வா 7-ம் வகுப்பும், சூர்யா 6-ம் வகுப்பும் படித்து வந்ததனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதலே சோழவரம் சுற்றுவட்டார இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று காலையும் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலையில் சிறுவர்கள் இருவரும் அருகில் உள்ள மோட்டார் பம்ப்செட்டிற்கு சென்றனர். அப்போது அங்கிருந்த இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவரம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் சிறுவர்கள் இருவரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.