பரோட்டா சாப்பிட்ட லாரி ஓட்டுநர் திடீர் மரணம்.. போலீசார் விசாரணை!

 

நிலக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட்ட லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (39). லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ம் தேதி சதுரகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக சேர்ந்தார்.

பின்னர் அங்கிருந்து ராமகிருஷ்ணனும், அதே ஊரைச் சேர்ந்த வீரமுத்து என்பவரும் லாரியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி தனியார் மில்லுக்கு வந்தனர். இரவு அங்குள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டு விட்டு 2 பேரும் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

சிறிது நேரத்தில் ராமகிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது தாயார் இன்பவள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணன் பரோட்டா சாப்பிட்டதால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றார்.