கைகளை கட்டி போட்டு துப்பட்டாவால் கழுத்தை நெரித்து திருநங்கை கொலை... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

 

சென்னை மாதவரத்தில் கைகளை கட்டி போட்டு துப்பட்டாவால் கழுத்தை நெரிக்கப்பட்டு திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாதவரம் அடுத்து உள்ள மாத்தூர் 200 அடி சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே லேத் பட்டறை ஒன்று இயங்கி வருகிறது. அந்த இடத்தில் கனரக வாகனங்கள் நிறுத்துவது வழக்கம். மணலியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் அந்தப் பகுதியில் தனது லாரியை நிறுத்தி வைத்துள்ளார். வண்டியை எடுப்பதற்காக சென்று பார்த்த போது லாரியின் அருகே திருநங்கை ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.

இரண்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் ரத்த காயங்களுடன் திருநங்கை உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் திருநங்கை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாதவரம் பகுதியில் உயிரிழந்தது திருநங்கை சனா (29) என்பது தெரியவந்தது. இவர் எண்ணூர் ஆல் இந்தியா ரேடியோ தெரு அருகில் உள்ள சுனாமி குடியிருப்பில் வசிந்து வந்தது தெரியவந்துள்ளது. 

மர்ம நபர்கள் இரவு நேரத்தில் திருநங்கை சனாவின் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து திருநங்கை கொலைகாண ஆதாரங்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.