தமிழ்நாட்டில் தொடரும் சோகம்.. நெல்லை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!!

 

வீரவநல்லூர் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள உப்புவாணியமுத்தூரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் ஆனந்தி (20). இவர் வெளியூரில் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த ஆனந்தி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரவநல்லூர் போலீசார், இறந்த ஆனந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்சனையில் ஆனந்தி இந்த முடிவை எடுத்ததாக தெரியவந்துள்ளது. எனினும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் குடும்ப பிரச்சனையால் தான் தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது கல்லூரியில் ஏதும் பிரச்சனையா? உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுமுறையில் வீட்டுக்கு வந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.