வியாபாரி பட்டப்பகலில் வெட்டி படுகொலை... திண்டுக்கல் அருகே பயங்கரம்!!

 

திண்டுக்கல் அருகே முன்பகை காரணமாக வெள்ளைப் பூண்டு வியாபாரி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சின்னத்தம்பி. இவர் வெள்ளைப் பூண்டு வியாபாரம் செய்து வந்தார். மேலும் இவர் மீது காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று தனது வீட்டின் அருகே உள்ள சகோதரர் வீட்டில் உறங்கச் சென்றுள்ளார். 

அப்போது ஐந்துக்கும் மேற்பட்டோர் மர்ம நபர்கள் பட்டப் பகலில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சின்னத்தம்பியை தாங்கள் கொண்டு வந்த அரிவாள் உள்ளிட்ட பலத்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் சின்னத்தம்பி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் தாலூகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சின்னத்தம்பியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் மாவட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற படுகொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.