நாளை விடுமுறை.. ரேஷன்தாரர்களுக்கு வந்த அறிவிப்பு!

 

தமிழ்நாட்டில் நாளை (நவ. 25) ரேஷன் கடைகள் இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும்  ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.

பண்டிகை காலங்களில் மக்களின் தேவைகளின் அடிப்படையில் விடுமுறையின்றி இயங்க ரேஷன் கடைகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி தீபாவளியை ஒட்டி ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் செயல்பட்டு வந்தன. இதனை ஈடுசெய்யும் வகையில்  அடுத்ததாக விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி  இருந்தது.

கடந்த நவம்பர் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை விடுமுறை நாட்கள் இன்றி தொடா்ச்சியாக ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்பட்டன. தொடர்ச்சியாக நியாய விலைக் கடைகள் விடுமுறையின்றி இயங்கியதற்கு ஈடாக அடுத்து வரும் நாட்களில் விடுமுறை வழங்கப்படும் என உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்திருந்தது.

அதன்படி நவம்பர் 13-ம் தேதி தீபாவளிக்கு மறு நாள் திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல் நவம்பர் 25-ம் தேதி நாளை சனிக்கிழமையும் விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.