அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

 

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவு இன்றுடன் முடிவடையவுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளது. இந்த பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது.

கடந்த 19-ம் தேதியுடன் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், மே 22 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இளநிலை படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று (மே 22) கடைசி நாளாகும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு முடிந்ததும், மாணவர்களின் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிக்கு வருகிற 23-ம் தேதி அனுப்பி வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து வருகிற 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.

பின்னர் வருகிற 30-ம் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 9-ம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும், அடுத்த மாதம் 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 2-ம் கட்ட பொது கலந்தாய்வும் நடத்தப்பட இருக்கிறது. கலந்தாய்வு நிறைவு பெற்றதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் 22-ம் தேதி தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.